அறிவான் - திரைவிமர்சனம்
அறிவான் – தொடர்கொலைக்கும் திரில்லர் விசாரணைக்கும் இடையிலான முயற்சி
தொடர்ச்சியான கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் மையமாகக் கொண்ட திரில்லர் படம் தான் அறிவான்.
ஹீரோ ஆனந்த் நாக் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி. சஸ்பென்ஷனில் இருந்த அவர், ஒரு நல்ல நாளில் மீண்டும் பணியில் சேருகிறார். அவர் பொறுப்பேற்கும் இடம் நெய்வேலி. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் இரட்டை கொலை சம்பவங்கள் வழக்கை சிக்கலாக்குகின்றன.
அந்தக் கொலைகளை விசாரிக்கும் ஆனந்த் நாக், விசாரணையின் போக்கில் பல திருப்பங்களை சந்திக்கிறார். அவற்றே படத்தின் மையக் கதையை நகர்த்துகின்றன.
ஆனந்த் நாக் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் போலீஸ் யூனிஃபார்ம் அவருக்கு சற்றே பொருந்தாதது போல் தோன்றினாலும், கதை நகர்ந்தபின் அது இயல்பாகிறது.
பிக்பாஸ் ஜனனி ஒரு மீடியா நபராக தோன்றி இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையைச் செய்துள்ளனர்; பெரிதாக குறை சொல்ல முடியாது.
யஸ்வந்தின் ஒளிப்பதிவு இன்னும் தனித்துவம் காட்டியிருக்கலாம். இருப்பினும் ட்ரோன் ஷாட்கள் மற்றும் இடைவேளைக் காட்சியில் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இராவின் இசையில் ஒரு சோகப்பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் திரில்லர் உணர்வை தக்கவைத்துள்ளது.
நெய்வேலியை பின்னணியாகக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் ஒரு திரில்லர் கதையை சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் அருண் பிரசாத். கதையில் அவர் எடுத்த உழைப்பு தென்படுகிறது. சில ட்விஸ்ட்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படத்தின் வேகம் சராசரியாக இருந்தாலும், சில காட்சிகளில் தெரியும் செயற்கைத்தன்மை சற்றே சோர்வை தருகிறது. மேலும், ஸ்டேஜிங் மற்றும் தொழில்நுட்பத் தரத்தில் படம் இன்னும் மேம்பட்டிருக்கலாம்.
ஹீரோவின் கூர்மையான புத்திசாலித்தனமான ஐடியாக்கள் அதிகம் இல்லாததும் ஒரு குறையாகும்.
சிறிய நடிகர்கள் குழுவை வைத்து பரபரப்பான திரைக்கதை அமைக்க முயன்ற இயக்குநரின் தைரியம் பாராட்டத்தக்கது. குறைகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் பார்த்தால், இது ஒரு முறை பார்க்கக்கூடிய திரில்லர் படமாக திகழ்கிறது.
Comments
Post a Comment